புனித பியோ ஜெபமாலை இயக்க விழா

புனித பியோ செபமாலை இயக்கத்தின் 3வது ஆண்டு விழாவானது திருவையாறு தூய இதய அன்னை ஆயத்தில் 20.09.2015 ஞாயிறன்று நடைபெற்றது. முந்தின நாள் இரவு ஆன்மீக வழிகாட்டியின் தலைமையில் இயக்கத்தின் உறுப்பினர்கள் இணைந்து இயக்கத்தின் கருத்துக்களுக்காக ஜெபமாலை ஒப்புக் கொடுக்கப்பட்டது. பின்னர் பியோ குரல் ஆசிரியர் குழுவினரின் கலந்துரையாடல் நடைபெற்றது. உறுப்பினர்கள் கடந்த ஒரு வருடமாக புனித பியோ செபமாலை இயக்கத்தில் தங்களது பங்களிப்பு எவ்வாறு இருந்தது என்றும் இன்னும் இந்த இயக்கத்தை எவ்வாறு மெருகூட்டுவது என்றும் விவாதிக்கப்பட்டது. பின்னர் உறுப்பினர்கள் புனித பியோ வழியாக தாங்கள் பெற்ற குடும்ப சமாதானம் மற்றும் இறை நம்பிக்கையை பகிர்ந்துக் கொண்டார்கள். ஆன்மீக வழிகாட்டி அருட்தந்தை செல்வராஜ்  அவர்கள் ஒவ்வொருவரும் இன்னும் அதிக உற்சாகத்துடனும் ஊக்கத்துடனும் செயல்பட வேண்டும் என்றும் முடிந்த வரையில் தாங்கள் வசிக்கும் பகுதியில் உறுப்பினர்கள் மாதம் ஒரு முறையாவது கூடி செபிப்பதற்கு முயற்சி எடுக்குபடியாகவும் கூறினார்.

20.09.2015 ஞாயிறன்று காலை 8.20 மணியளவில் ஆடம்பர செபமாலையுடன் திருப்பலியானது அருட்தந்தை செல்வராஜ் அவர்கள் தலைமையில் தொடங்கியது. தனது மறையுரையில் தந்தை பியோ தனது வாழ்வில் எவ்வாறு இயேசுவையும், அன்னை மரியாளையும் முன்மாதிரியாகக் கொண்டு வாழ்ந்தார் என்றும் நாமும் எவ்வாறு தந்தை பியோவை முன்மாதிரியாகக் கொண்டு வாழ்வது என்றும் எடுத்துரைத்தார்.

திருப்பலிக்குப் பின்னர் தஞ்சை மாவட்ட செபமாலை இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. இருதயராஜ் அவர்கள் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி டல்சி டி குருஸ் அவர்கள் மற்றும் திருமதி வேணி ஜாண் அவர்களும் திருவையாறு பங்கு மக்களுக்கு புனித பியோ வழியாக தாங்கள் பெற்ற இறை அனுபவத்தையும் பியோவின் அற்புதங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். அன்று திருவையாறு பங்கிலிருந்து நாற்பதுக்கும் மேற்பட்ட மக்கள் மிக ஆவலுடன் புதிய உறுப்பினராக சேர்ந்து கொண்டனர். அதன் பின்னர் ஒரு மணி நேர ஆராதனை நடைபெற்றது. இந்த விழாவை மிக சிறப்பாக நடத்தவும் நமது இயக்க விழாவிற்கு வெளியூரிலிருந்து வந்திருந்த விருந்தினர்களை மிக அன்பாக உபசரித்த திருவையாறு புனித தூய இதய அன்னை ஆலய பங்குத் தந்தை அருட்திரு கிறிஸ்து ராஜா அவர்களுக்கு சிறு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜெபமாலை, இயக்கப் பிள்ளைகளுக்கு வழங்கியதைப் போலவே இந்த ஆண்டும் வழங்கப்படடது. மஸ்கட்டைச் சார்ந்த திரு. பழனிவேல் சேகர் அவர்கள் இயக்க விழாவை முன்னிட்டு தனது பங்களிப்பாக 1000 செபமாலை அன்பளிப்பாக வழங்கினார்கள். இயக்க விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் சிங்கப்பூர் புனித பியோ ஜெபமாலை இயக்கத்தைச் சார்ந்த திரு. அந்தோணி ஜோசப் அவர்கள் மதிய விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். நமது ஆன்மீக வழிகாட்டி இத்தாலி சென்றிருந்தபோது ஆன்மீகப்பிள்ளைகளுக்கென்று வாங்கிய தந்தை பியோவின் புனித திருப்பண்டமும் வழங்கப்பட்டது. மேலும் சென்னை திரு.கெவின் அவர்கள் நமது இயக்க விழாவிற்காக தந்தை பியோவின் திருஉருவம் பதித்த கீ-செயின் வழங்கினார்கள். திரு இருதயராஜ் அவர்கள் தந்தை பியோவின் நவநாள் செப புத்தகங்களும், படங்களும் வழங்கினார்கள். திருமதி ராணி ஜெகதீஷ் அவர்கள் தந்தை பியோவின் நவநாள் செபம் தாங்கிய படங்களையும் வழங்கினார்கள். திருவிழாவிற்கு வந்திருந்த இயக்கப் பிள்ளைகளை அருட்தந்தையர்கள் அ.செல்வராஜ் மற்றும் கிறிஸ்து ராஜா அவர்கள் திருப்பயணமாக பூண்டி திருத்தலத்திற்கு அழைத்துச் சென்றார்கள். இறுதியாக திருமதி வாசுகி செல்வராஜ் அவர்கள் இயக்க விழா சிறப்பாக நடைபெற உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி கூற  அருட்தந்தையர்கள் ஆசீர் வழங்க கூட்டம் இனிதே நிறைவுற்றது.

-வாசுகி செல்வராஜ் தூத்துக்குடி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக